விதைப்பந்து- SEED BALL
விதைப்பந்து (Seeds Ball) என்பது களிமண் மற்றும் உரம் (compost) அல்லது பசுஞ்சாணத்தாலான உருண்டை ஆகும். இவற்றின் நடுவே மூலிகைகள் (அ) வண்ண மலர் (அ) மரம் விதைகள் இருக்கும்.
பொதுவாக வெறும் விதைகளை விதைத்தால் அவை மற்ற உயிரினங்களால் உணவாக்கப்படலாம் (அ) வெப்பத்தால் தன் முளைக்கும் தன்மையை இழந்து விடலாம். நிலமானது செடி வளர்வதற்கான தன்மை இல்லாமல் கடினமானதாக இருக்கலாம். அதனால் விதைகள் முளைக்காது.
எனினும் விதைப்பந்தானது அவ்வாறில்லை. நீங்கள் வெளியே செல்லும் போது தரிசு நிலங்கள் (அ)
காடுகள் (அ) மலைகள் இருந்தால் இதனை வீசி செல்லலாம். அவ்விதைகள் மழை வரும் வரை எலி, எறும்பு, குருவிகளிடமிருந்து பாதுகாப்பாய் இருக்கும். ஒரு வருடம் வரை விதை பத்திரமாக முளைக்க ஏற்றதாக இருக்கும்.
விதைகளை பொறுத்தவரை சில நாட்களுக்கு தேவையான சத்துக்கள் விதையிலேயே வைக்கப்பட்டிருக்கும். எனவே சில நாட்களுக்குப்பின் உரம் தேவைப்படும். இதன்போது விதைப்பந்தில் கலந்துள்ள உரம் (அ) சாணமானது மண்ணில் நுண்ணுயிர்களை உருவாக்கி செடியின் வேர் மண்ணில் எளிதில் செல்ல ஏற்ற வகையில் பக்குவப்படுத்தி விடும். மண்ணின் கடினத்தன்மையை அகற்றி மிருதுவாக்கி விடும். உரம் (அ) சாணத்தை உண்ணும் நுண்ணுயிர்களின் கழிவை செடியின் வேர் உண்டு தன்னை அம்மண்ணில் நிலைப்படுத்திக் கொள்ளும். மேலும் விதைப்பந்தில் தண்ணீர் பட்டவுடன் இளகுவதுடன் நுண்ணுயிர்களை உண்டாக்கி நிலத்தை உழுது இளகுவாக்கியும் விடும்.
நிலத்தில் விழுந்த இந்த உருண்டைகலிலுள்ள களிமண் உருகி நிலத்தோடு ஒட்டும் மற்றும் அதிலுள்ள கலப்பு கூட்டு உரம் விதை வளர துணை புரியும்.
அவ்வாறு எறியப்பட்ட பந்துகளில் உள்ள விதைகள் முளைத்து அந்த இடமே பச்சை பசேலென்று காட்சியளிக்கும், எங்கெல்லாம் வறண்ட தரிசு நிலம் காணப்பட்டதோ அங்கு அழகிய வண்ண மலர் செடிகளின் விதைகளை தூவ நந்தவனாமகும். இந்த முறையால் சிறு பறவைகள் , பட்டாம்பூச்சிகள் மற்றும் தேனீக்கள் ஆகியன பயன்பெறும்.
எனவே ஓய்வு நேரத்தில் விதைப்பந்தை உருவாக்கி வைத்து வெளியே செல்லும் போது நல்ல இடம் பார்த்து வீசி விடுங்கள். கோடை காலமானாலும் வீசி விடுங்கள். பறவைகள் கூட தனக்கு உணவளித்த மரத்திற்கு நன்றிக்கடனாக விதைகளை நிலத்தில் எச்சமாக விதைத்துச் செல்கிறது. அதைப்போல் நாமும் விதைப்பந்தை விதைப்போம்.
வீரியமான விதைப்பந்து!
*தண்ணீரோடு மாட்டுச் சிறுநீர் சேர்த்தால் நல்ல பலன் கிடைக்கும்.
*மாட்டுச்சாணத்தோடு மண்புழு உரம் சேர்த்தால் வீரியம் அதிகரிக்கும்.
*கறையான் புற்று மண்ணைப் பயன்படுத்தினால் விதைகளின் முளைப்புத்திறன் அதிகரிக்கும்.
*விதைப்பந்து தயாரிக்கச் சிறிது சாம்பலைச் சேர்த்தும் தயாரிக்கலாம். இல்லையென்றால் விதைப்பந்துகள் ஈர நிலையில் இருக்கும்போது அதன்மீது சாம்பலைத் தூவிவிட்டால் பூச்சிகள் தாக்காது.
*புளி, சப்போட்டா போன்ற மர வகைகளும் இந்த முறையில் நன்றாக வளரும்.
*கடினத் தோல்கொண்ட விதைகளைத் தண்ணீர் கலந்த பஞ்சகவ்யா, மாட்டுச் சிறுநீரில் 2-லிருந்து 4 மணி நேரம் ஊறவைத்துப் பயன்படுத்தலாம்.
விதைப்பந்து தயாரிப்பு முறை
தேவையான பொருட்கள்
களிமண் 5 பங்கு
விதைகள் 1 பங்கு
கலப்பு உரம் (அ) சாணம் 1 பங்கு
ஒரு பாத்திரம்
தேவையான அளவு தண்ணீர்
செய்முறை
கலப்பு உரம் மற்றும் விதைகளை ஒரு பாத்திரத்தில் நன்றாக கலக்கவும்.
பின்னர் இதனுடன் களிமண்ணை கலந்து, சிறிது சிறிதாக தண்ணீர் கலந்து பிசையவும். நீரின் அளவு அதிகமாககூடாது.
திடமான கலவை உருண்டை பதம் வந்தவுடண், பெறிய உருண்டையாக
பிடித்து அதிலிருந்து சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
பிறகு இரவு முழுவதும் காய விடவும், காலையில் விதைப்பந்து தயார்.
இறுதியாக இந்த விதைப்பந்து எங்கு பசுமையாக வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அங்கு வீசிவிடவும்.