சத்துமாவு தயாரிக்கும் முறை
இன்றைய காலகட்டத்தில் பண்டைய கால உணவு முறை என்பது சில இடங்களில் மட்டுமே சாத்தியமாக உள்ளது. இப்போதுதான் மக்களுக்கு பண்டைய கால உணவுமுறை பற்றியும், அதன் நன்மைகள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்பட்டு கொண்டிருக்கிறது. ஊட்டச்சத்து மிக்க உணவான சத்துமாவை தற்போது மக்கள் அனைவரும் விரும்பி வாங்குகின்றனர்.
குழந்தைகளுக்கு ஏற்ற உணவு என்பதால் விற்பனைக்கு பஞ்சமில்லை. இந்த தொழிலை நீங்கள் மேற்கொள்வதன் மூலம் ஊட்டச்சத்து மிகுந்த இந்தியாவை உருவாக்குவதோடு மட்டுமில்லாமல் உங்களால் மிகப்பெரிய தொழிலதிபர் ஆகவும் வாய்ப்பு உள்ளது. இப்போது இதனை எவ்வாறு தயாரிப்பது என்பதை விரிவாக காண்போம்.
சத்துமாவு தயாரிக்க தேவையான பொருட்கள் :
ராகி 2 கிலோ,
சோளம் 2 கிலோ,
கம்பு 2 கிலோ,
பாசிப்பயிறு அரை கிலோ,
கொள்ளு அரை கிலோ,
மக்காசோளம் 2 கிலோ,
பொட்டுக்கடலை ஒரு கிலோ,
சோயா ஒரு கிலோ,
திணை அரை கிலோ,
கருப்பு உளுந்து அரை கிலோ,
சம்பா கோதுமை அரை கிலோ,
பார்லி அரை கிலோ,
நிலக்கடலை அரை கிலோ,
அவல் அரை கிலோ,
ஜவ்வரிசி அரை கிலோ,
வெள்ளை எள் 100 கிராம்,
கசகசா 50 கிராம்,
ஏலம் 50 கிராம்,
முந்திரி 50 கிராம்,
சாரப்பருப்பு 50 கிராம்,
பாதாம் 50 கிராம்,
ஓமம் 50 கிராம்,
சுக்கு 50 கிராம்,
பிஸ்தா 50 கிராம்,
ஜாதிக்காய் 2,
மாசிக்காய் 2.
செய்முறை :
ராகி, சோளம், கம்பு, பாசிப்பயிறு, கொள்ளு ஆகியவற்றை தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
தண்ணீரை நன்றாக வடித்த பின்னர், அதை ஒரு துணியில் கட்டி 12 மணி நேரம் கழித்து எடுத்தால், தானியங்கள் முளைவிட்டு இருக்கும். அவற்றை 3 நாள் வெயிலில் காய வைக்க வேண்டும்.
மற்ற பொருட்களை ஒரு நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். அனைத்தையும் மொத்தமாக மாவு மில்லில் அரைத்து, 4 மணி நேரம் ஆற வைத்தால் சத்து மாவு தயார்.
அதை கால்கிலோ, அரை கிலோ, ஒரு கிலோ அளவு பிளாஸ்டிக் கவரில் அடைத்து லேபிள் ஒட்டி, மற்றொரு கவர் இட்டால் விற்பனைக்கு தயார்.
சத்து மாவு தயாரிக்க தேவையான பொருட்கள் மளிகைக் கடைகளில் கிடைக்கின்றன. இதற்கு தனியாக இடம் எதுவும் தேவையில்லை. வீட்டிலேயே தானியங்களை ஊற வைத்து, முளை கட்டலாம்.
வீட்டு வளாகத்தில் காய வைக்கலாம். தானியங்களை வீட்டு மிக்சியில் அரைத்தால் சரியாக வராது. மாவு மில்லில் கொடுத்து அரைக்க வேண்டும்.
பலசரக்கு கடைகள், டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள், காதி, சர்வோதய விற்பனை நிலையங்களுக்கு சப்ளை செய்யலாம். நம் நலனையும், மக்கள் நலனையும் கருத்தில் கொண்டு இத்தொழிலை மேற்கொண்டால் வெற்றி நம்வசம்.