மாதச் சம்பளதாரர்களுக்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி(EPF) கைகொடுத்து வருகிறது. பெரு நிறுவனங்களில் பணியாற்றுவோர் தங்களின் வருங்கால வைப்பு நிதியை ஆன்லைன் மூலம் தெரிந்து கொண்டாலும், மற்ற நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு EPF பேலன்ஸை எப்படி தெரிந்துகொள்வது என தேடி வருகின்றனர்.
கொரோனா தொற்று தீவிரமாக இருப்பதால், தங்களுடைய வருங்கால வைப்பு நிதியில் இருக்கும் பணத்தை EPF அலுவலகத்துக்கு நேரடியாக சென்று தெரிந்துகொள்ள வாய்ப்பில்லை. வீட்டில் இருந்தபடியே EPF பேலன்ஸ் -ஐ எப்படி தெரிந்து கொள்வது என்பதை பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி (EPF)
நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் எதிர்கால நலன் கருதி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்யப்படுகிறது. ஊழியர்கள் தங்களது ஊதியத்தில் குறிப்பிட்ட தொகையையும், நிறுவனம் சார்பில் குறிப்பிட்ட தொகையும் பங்களிப்பு செய்யும் தொகைக்கு அரசு சார்பில் குறிப்பிட்ட தொகை வட்டி விகிதமாக கொடுக்கப்படுகிறது. அந்த தொகையை ஓய்வுக்குப் பின்னர் அல்லது தேவைப்படும் சமயத்தில் விண்ணப்பித்து ஊழியர்கள் முன்கூட்டியே கூட பெற்றுக்கொள்ளலாம். மாதச் சம்பளதாரர்கள் பெறும் அடிப்படை ஊதியத்தில் 12 விழுக்காடு வரை பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்பு நிதியில் முதலீடு செய்யப்படும்.
தங்களது EPF அக்கவுண்டில் இருக்கும் தொகையை வீட்டில் இருந்தபடி ஊழியர்கள் எப்படி தெரிந்து கொள்வது?
குறுஞ்செய்தி (SMS)
பணியாளர்கள் தங்களுடைய EPF எண்ணுடன் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண் மூலமாக வருங்கால வைப்பு நிதி தொகையை தெரிந்துகொள்ளலாம். அதற்கு தங்களுடைய எண்ணில் இருந்து, தொழிலாளர் வருங்கால வைப்பு மையம் கொடுத்துள்ள 7738299899 என்ற வாடிக்கையாளர் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்ப வேண்டும். உங்களுக்கு தேவையான மொழிகளில் உங்களுக்கான பதிலை பெற்றுக்கொள்ளலாம். தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட 10 மொழிகளில் இந்த சேவை வழங்கப்பட்டு வருகிறது. வாடிக்கையாளர் மையத்துக்கு மெசேஜ் அனுப்பியவுடன், இ.பி.எப் பேலன்ஸ், கடைசியாக டெபாசிட் செய்யப்பட்ட நாள் உள்ளிட்ட விவரங்கள் வரும்.
மிஸ்டு கால் (Missed Call)
EPF பணம் பிடித்தம் செய்யப்படும் பணியாளர்கள், UAN போர்ட்டலில் பதிவு செய்து தனிநபர் அக்கவுண்டை ஓபன் செய்ய வேண்டும். இதனை சரியாக செய்திருந்தீர்கள் என்றால், மிஸ்டு கால் மூலமாகவே நீங்கள் பேலன்ஸ் பார்க்க முடியும். 011-22901406 என்ற எண்ணுக்கு பிஎஃப் கணக்குடன் பதிவுசெய்யப்பட்டுள்ள மொபைல் எண்ணிலிருந்து நீங்கள் மிஸ்டு கால் கொடுத்தால்,
PF பேலன்ஸ் குறித்த விவரங்கள் உங்களுக்கு வரும். இந்த தொலைபேசி எண்ணுக்கு அழைத்தால் கட்டணம் வசூலிக்கப்படாது.
EPFO இணையதளம்
வருங்கால வைப்பு நிதி அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக உங்களின் PF பேலன்ஸ் தொகையைப் பார்க்க முடியும். முதலில், www.epfindia.gov.in என்ற வலைதளத்துக்கு சென்று PF எண் மற்றும் அதற்கான பாஸ்வேர்டை டைப் செய்து உள்ளே நுழைய வேண்டும். For Employees என்ற பிரிவின் கீழ் For Employees என்ற சேவையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பின்னர் Services என்ற வசதியில் Member Passbook என்பதை கிளிக் செய்யவும். பிஎஃப் எண் மற்றும் பாஸ்வேர்டு மூலமாக நீங்கள் உங்களது PF பேலன்ஸ் தொகையைப் பார்க்க முடியும்.
உமாங் ஆப் (UMANG app)
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாதார்கள் தங்களது பிஎஃப் விவரங்களைச் சரிபார்க்கவும், அதில் மாற்றங்கள் செய்யவும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களுக்கு அலைய வேண்டியிருக்கும் சிரமத்தைக் குறைப்பதற்காக அரசு தரப்பிலிருந்து உமாங் (UMANG) என்ற மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த செயலி மூலம் வீட்டில் இருந்துகொண்டே PF பேலன்ஸ், PF பணம் எடுப்பது உள்ளிட்ட சேவைகளை வாடிக்கையாளர்கள் பெறமுடியும்.