உலகநாயகி ஸ்ரீஉலகாண்டஈஸ்வரி அம்மன்..

உயர்வான வாழ்வருளும் உலகநாயகி 
ஸ்ரீஉலகாண்டஈஸ்வரி அம்மன்..



பக்தர்களைப் பிடித்த நோய்களையெல்லாம் ஓட ஓட விரட்டி ஓட்டும் பிடாரி அவள். அதனால்தான் அந்த ஊருக்கே `ஓட்டப்பிடாரம்' என்ற பெயர் வந்தது.

செக்கிழுத்த செம்மல் வ.உ.சி. பிறந்த ஓட்டப்பிடாரம் ஊரிலே அருள்பாலிக்கும் உலகாண்ட ஈஸ்வரி அம்மன்தான் நாம் இப்போது தரிசிக்கப்போகும் தெய்வம்.

இந்த ஊரில் காலரா, அம்மை போன்ற நோய்களெல்லாம் வராமல் உலகாண்ட ஈஸ்வரிதான் காப்பாற்றுகிறாள். குழந்தைவரம் கேட்டுப் பிரார்த்தனை செய்பவர்களுக்கும் இவள்தான் கண்கண்ட தெய்வம். அம்மன் அருளால் பிறந்த குழந்தைகளுக்கு உலகம்மாள், உலகநாதன் என்று பெயர் வைப்பது இங்கே சர்வ சாதாரணம்...'' அம்பாளின் சிறப்பைச் சொல்லிக் கொண்டே போகிறார்கள் பக்தர்கள்.

சிறிய கோயில் என்றாலும் அற்புதமாக இருக்கிறது ஆலயம். வாசலில் ஈச்சமர உயரத்திற்கு கோட்டைக் கருப்பசாமி காவலுக்கு நிற்கிறார். அவருக்கு அருகே சங்கு ஊதியபடி ஸ்ரீஆழி சங்கிலி பூதத்தார் நிற்கிறார் .

வாயில் மண்டபத்தைத் தாண்டினால் நெடிதுயர்ந்த கதவுகளுடன் கோபுரம் நம்மை வரவேற்கிறது. உள்ளே நுழைந்ததும் வேதாளத்தையும், வைரவரையும் தரிசனம் செய்யலாம். எதிரே ஆஸ்கார பலிபீடம்  காட்சியளிக்கிறது.

கீழ்ப்பக்கத்தில் கன்னி விநாயகர் கிழக்கு நோக்கி அமர்ந்திருக்கிறார்.
 *தவசித் தம்பிரான், கொம்பு மாடன், கொம்பு மாடத்தி, பேச்சி, பிரம்ம சக்தி* ஆகியோர் காவல் தெய்வங்களாக இங்கே காட்சிதருகிறார்கள். மண்டபத்துக்குள் கிழக்கு நோக்கி *நல்ல மாடசாமி, பேச்சியம்மன், கருப்பசாமி* ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள்.

கர்ப்பகிரகத்தில் உலகாண்ட ஈஸ்வரியம்மன் வடக்குத் திசை நோக்கித் தன் பெரிய விழிகளால் கோலோச்சி அருள்பாலிக்கிறாள். வேப்பமர நிழல் சூழ அம்பாள் கல்மண்டபக் கருவறையில் எழிலாக அமர்ந்திருக்கிறாள்.
இவளது சிறப்பை வ.உ.சிதம்பரம் பிள்ளை, தான் எழுதிய சுய சரிதையில் `வேண்டிய எல்லாம் வேண்டியாங்களிக்கும் உலகம்மை` என்று பரவசப்பட்டு எழுதியிருக்கிறார்.

அந்தக் காலத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சிக்கல் என்ற கிராமத்தில்தான் இந்த அம்மன் முதலில் கோயில் கொண்டிருந்ததாகவும், அங்கிருந்து இங்கே குடிபெயர்த்த கிராமத்தார்கள், ஆற்றல்மிகு உலகம்மனையும் அழைத்து வந்து விட்டார்கள் என்றும் தல புராணம் கூறுகிறது.

இந்த ஊரின் பழைய பெயர், வீரபாண்டியபுரம். உலகம்மை இங்கே குடிகொண்டதிலிருந்து ஓட்டப்பிடாரம் என்று மாறிவிட்டது. ஒவ்வோர் ஆண்டும் புரட்டாசித் திங்களில் நவராத்திரி விழாவும், ஆடி மாதம் முளைக்கொட்டுத் திருவிழாவும், பங்குனி மாதம் கடைசி செவ்வாயில் கொடை விழாவில் அம்மனுக்குப் பாலாபிஷேகமும் நடைபெறும். பங்குனி கடைசித் திங்களில் பக்தர்கள் மாவிளக்கு ஏற்றுவார்கள். 

வெண்பாவிற்குப் புகழேந்தி, சிலேடைக்குக் காளமேகம் என்பது போல கசப்புக் கவிதைகளுக்கு, ஆண்டான் கவிராயர் என்று சொல்வார்கள்.அந்த ஆண்டான் கவிராயர் பிறந்த ஊர் இந்த ஓட்டப்பிடாரம்தான்

ஆண்டான் கவிராயர்...

அடியென்றால் அப்படியோர் அடி விழுந்தது ஆண்டானுக்கு. அதுவும், பழுத்த பிரம்படி. அடித்தவர், திண்ணைப் பள்ளிக் கூடத்து ஆசிரியர்தான்.

காரணம் என்ன?
ஆண்டானுக்குச் சுட்டுப் போட்டாலும் படிப்பு ஏறவில்லை. ஆண்டான், நன்கு படித்த பண்டிதர் வீட்டில் பிறந்தவன்தான். ஆனால், இவன் மட்டும் இப்படியிருக்கிறானே என்ற கவலை ஆசிரியருக்கு. அடி பின்னியெடுத்து விட்டார். பார்த்தான், ஆண்டான். அடியில் வலி பொறுக்க முடியாமல் பள்ளிக்கூடத்தை விட்டு ஓடி வந்து விட்டான்.

எங்கே போவது?
வீட்டுக்குப் போனால் அப்பா அடிப்பாரே!

அதனால், நேராக உலகாண்ட ஈஸ்வரியின் கோயிலுக்குச் சென்று விட்டான்.

கோயிலுக்குள் நுழைந்தவன், இங்கேயும் தன்னைத் துரத்திக் கொண்டு வாத்தியார் வந்து விடுவார் என்று பயந்தானோ என்னவோ, நேராய் கர்ப்பகிருகத்தினுள் நுழைந்த ஆண்டான், உள்ளே நுழைந்ததும் கதவைப் பூட்டி உள்பக்கம் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டான்.

அந்த நேரத்தில் உலகாண்ட ஈஸ்வரி, கோயிலில் இல்லை. அவள்தான் ஊர்க் காவலுக்கு வெளியில் சென்று விட்டாளே?

ஊரைச் சுற்றி முடித்த தேவி, ஆலயத்திற்குத் திரும்பினாள். தன் கர்ப்பகிருகத்தின் கதவுகள் உட்பக்கம் இறுக மூடித் தாழிடப்பட்டிருப்பதைக் கண்டாள், உலகாண்ட ஈஸ்வரி.
`கதவைத் திற'' என்றாள்.

புலமை பெறுக..

உள்ளேயிருந்த ஆண்டானின் நா தடுமாறியது. ``அம்மா, தாயே, நான் மக்குப் பிள்ளையாக இருக்கிறேன். பாடங்கள் எல்லாம் என் நாவினில் ஏறவில்லை.

எனக்குக் கல்வியையும் புலமையையும் நீ தந்தால்தான் கதவைத் திறப்பேன்'' என்று பிடிவாதம் பிடித்தான்.உலகம்மை புன்னகைத்துக் கொண்டாள். ``உன் நாவை நீட்டு'' என்றாள். சந்தேக புத்தி கொண்ட ஆண்டான், அப்போதும் கதவைத் திறக்கவில்லை. சாவித் துவாரம் வழியாக தன் நாக்கை நீட்டினான். உலகம்மை மீண்டும் புன்னகைத்தாள்.

அருகிலிருந்த வேப்ப மரத்திலிருந்து ஒரு குச்சியைப் பறித்து அவனது நாவில் `புலமை பெறுக' என்று எழுதினாள்.

அவ்வளவுதான், பிரம்மாவின் தலையெழுத்தோடு, உலகம்மையின் கலையெழுத்து சேர, ஆண்டானின் மனசுக்குள் கவிதை அலைபாய்ந்தது.

கசப்பு
வரம் பெற்றுவிட்டான் ஆண்டான். வரத்தைச் சோதித்துப் பார்க்க வேண்டாமா? ஒரு கவிதை பாடினான். கசப்புக் கவிதை. தன்னை அடித்த வாத்தியாரின் மேல் வெறுப்புக் கவிதை.

இவர் பாடிய கசப்பு கவிதைகள் பல வாயிலிருந்து உதிப்பது மற்றவருக்கு  சாபமாகவே இருந்தது

இவரே பின்நாளில் ஏரல் ஸ்ரீநட்டார் கொண்ட அம்மன்  திருக்கோவில் விஜயம் செய்தார் அப்போது மகனே கசப்பை விடுத்து இனிய பாடல் இயற்று என்றாள் அன்னை அருளோடு இனிமை உரைத்தார் 

ஏரல் ஸ்ரீநட்டார் கொண்ட அம்மன் கோவிலில் கவிராயர் சிலை அமைத்து வழிபடபடுகிறார் 

அமைவிடம்...
தூத்துக்குடியிலிருந்து 22 கி.மீ. தொலைவிலும், திருநெல் வேலியிலிருந்து 54 கி.மீ. தொலைவிலும் உள்ளது..

RECENT POST

தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?

ஒரு கோப்பை தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?????? ✳ தேங்காய் நீரில் கலோரிகள் மிகக்குறைவு. இதனை அருந்துவதால் உடல் புத்துணர்ச்சி அட...