அருள்மிகு உச்சிநாதர் திருக்கோவில்

அருள்மிகு உச்சிநாதர் திருக்கோவில்...


கடலூர் மாவட்டத்தில் சிவபுரி என்னும் ஊரில் அருள்மிகு உச்சிநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. 

மூலவர் : உச்சிநாதர் என்ற மத்யானேஸ்வரர்

அம்மன்/தாயார் : கனகாம்பிகை

தல விருட்சம் : நெல்லி

தீர்த்தம் : கிருபா சமுத்திரம்

புராணப்பெயர் : திருநெல்வாயில்

ஊர் : சிவபுரி

மாவட்டம் : கடலூர்

தல வரலாறு :

திருஞானசம்பந்தர், சீர்காழியில் வசித்த சிவபாத இருதயர்-பகவதி அம்மையார் தம்பதியரின் மகனாக அவதரித்தார்.

திருஞானசம்பந்தர் தனது மூன்றாம் வயதில் தந்தையுடன் சீர்காழி சட்டைநாதர் கோவிலில் உள்ள பிரம்ம தீர்த்தத்திற்கு வந்தார். தந்தை இவரை குளக்கரையில் உட்காரவைத்து விட்டு, தான் மட்டும் நீராடச் சென்றார். அப்போது திருஞானசம்பந்தருக்கு பசி ஏற்பட, 'அம்மா! அப்பா!" என்று அழுதுக் கொண்டிருந்தார்.

இவரது அழுகுரல் கேட்ட சிவன், பார்வதியை நோக்கி குழந்தைக்குப் பால் கொடுக்குமாறு கூறினார். அதன்படி சிவனுடன் திருஞானசம்பந்தருக்கு தரிசனம் தந்து மெய்ஞானம் கலந்த பாலை புகட்டினாள் அம்பிகை. பசி தீர்ந்த திருஞானசம்பந்தர் வாயில் பால் வழிய அமர்ந்து இருந்தார்.

குளித்து விட்டு வந்த தந்தை, 'பால் கொடுத்தது யார்? யாராவது ஏதாவது கொடுத்தால் வாங்கி சாப்பிடக்கூடாது என்பது உனக்குத் தெரியாதா? அபச்சாரம் செய்துவிட்டாயே," எனச்சொல்லி குச்சியால் திருஞானசம்பந்தரை அடிக்க கையை ஓங்கினார். சிவன், பார்வதி தரிசனம் தந்த திசையை நோக்கி கையை நீட்டிய திருஞானசம்பந்தர், 'தோடுடைய செவியன்" என்று பதிகம் பாடினார். தன் குழந்தைக்கு அம்பாளே பாலூட்டியது அறிந்து பரவசப்பட்டார் சிவபாத இருதயர். திருஞானசம்பந்தருக்கு 12 வயதில் திருமணம் நிச்சயமானது.

பிறகு மணமகள், உறவினர் மற்றும் சிவனடியார்கள் 63 பேருடன் சிதம்பரத்திலிருந்து ஆச்சாள்புரம் சிவன் கோவிலுக்கு அவர் சென்றார். செல்லும் வழியில், மதிய நேரம் உச்சி பொழுதாகிவிட்டதால் பசியின் காரணமாக இவர்கள் அனைவரும் சிவபுரி திருத்தலத்தில் தங்கினார்கள். 

திருஞானசம்பந்தரும், அவருடன் வந்தவர்களும் பசியுடன் இருப்பதை அறிந்த இத்தல இறைவன், கோவில் பணியாளர் வடிவில் வந்து அனைவருக்கும் அறுசுவை விருந்தளித்தார். இதனால் இத்தல இறைவன் 'உச்சிநாதர்" என்றும் 'மத்யானேஸ்வரர்" என்றும் அழைக்கப்படுகிறார்.

தலப்பெருமை :

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 3வது தேவாரத்தலம் ஆகும்.

இத்தலத்தில் சிவபெருமான் கிழக்கு பார்த்தும், அம்மன் தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர்.

சிவபெருமான் அகத்தியருக்கு காட்சி தந்த தலங்களில் இதுவும் ஒன்று. சிவலிங்கத்தின் பின்புறம் சிவன், பார்வதி திருமணக்கோலத்தில் அருளுகின்றனர். திருஞானசம்பந்தர் சிதம்பரத்தில் தங்கியிருந்த காலத்தில் தினமும் இத்தலம் வந்து தரிசனம் செய்துள்ளார்.

சிதம்பரம் நகருக்குட்பட்ட ஒரு பகுதியில் நெல் வயல்கள் அதிகம் இருந்தன. அப்பகுதி 'திருநெல்வாயில்" என அழைக்கப்பட்டது. தற்போது சிவபுரி எனப்படுகிறது. இங்கு தான் கோவில் அமைந்துள்ளது.

சக்தியிடம் ஞானப்பால் அருந்திய திருஞானசம்பந்தருக்கு இறைவன் உணவளித்த தலம் இது.

பிரார்த்தனை: 

இக்கோவிலில், குழந்தைகளுக்கு முதல் சோறு ஊட்டினால், காலம் முழுவதும் அந்த குழந்தையின் வாழ்வில் உணவு பிரச்சனை வராது என்ற நம்பிக்கை இருக்கிறது. 

நேர்த்திக்கடன்:

சிவன் மற்றும் அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், புது வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடனை பக்தர்கள் செலுத்துகின்றனர்.

 ⚛️🔆⚛️🔆⚛️🔆⚛️

RECENT POST

தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?

ஒரு கோப்பை தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?????? ✳ தேங்காய் நீரில் கலோரிகள் மிகக்குறைவு. இதனை அருந்துவதால் உடல் புத்துணர்ச்சி அட...